வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

மீண்டும் ஒரு சுனாமிக்காக!





நிலவொளியில் நீயும் நானும்
விடியும்வரை காய்ந்திருந்தோம்.

இன்று

நிலவொளியில் நீ மட்டும்‍ நிம்மதியாக
உறங்குகிறாய் - என்னை ஏமாற்றிவிட்டு.

நான்கு வருடங்களின் பின்பு
நான் மட்டும் இன்று தனிமையாக‌
கடற்கரை சாலையில் - காற்று வாங்கிக்கொண்டு.

செல்லமாக கோபம் கொண்டு - என்
கால்களை வருடியது கடல் அலைகள்.

நீ தழுவியது போல் உணர்ந்தேன்.

தாழை மரங்களில் தழுவிய காற்று -  உன்
கொலுசொலியானது.

படர்ந்து கிடக்கின்ற இராவணன் மீசைகள் -உன்
கூந்தலை கூறிற்று.

கரை ஒதுங்கிக் கிடந்த கிழிஞ்ஞல்கள் - உன்
சிதறிய‌ புன்னகைகள்.

மாலைக்கடலில் மின்னிடும் நிலா விம்பம் - உன்
அழகிய வதனமதை அலையாடியது

நிஜமானவை எல்லாம் இன்றும் - உன்
நினைவுகளோடு  இருக்கின்றன‌.

காத்திருக்கிறேன் கடற்கரை சாலையில் - மீண்டும்
ஒரு சுனாமிக்காக‌.

எப்போதும் உன்னோடு 
இரண்டறக் கலக்கலாமென்ற ஏக்கத்தோடு!


No comments: